யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால்
அவனது நாற்பது நாட்களின் தொழுகை ஏற்கப்படாது என்பது நபிமொழி.நூல் : முஸ்லிம் 4137
யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு
அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி.நூல்
: அஹ்மத் 9171
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும்
தீய எண்ணங்களை , அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை
(வெளிப்படுத்தி)ப் பேசாத வரை அல்லாஹ் (அவற்றுக்குத் தண்டனை
வழங்குவதில்லை) மன்னித்துவிடுகிறான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6664
ஒரு மனிதருக்கு (மறுமையில் ) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே
அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு
(மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து
நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)நூல்: திர்மிதீ
2319
இறை நம்பிக்கையுடைய ஆணும் இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது
விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும்
தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச்
சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323
நபித்தோழர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்கள் உள்ளத்தில்
சில (தடுமாற்றமான) விஷயங்கள் எழுகின்றன. அவற்றை (வெளிப்படுத்திப்)
பேசுவதைக்கூட நாங்கள் மிகப்பெரும் (பாவ)காரியமாகக் கருதுகிறோம்” என்று
கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உண்மையிலேயே நீங்கள் அத்தகைய
உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு
நபித்தோழர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு, “அதுதான்
ஒளிவுமறைவற்ற (தெளிவான) இறைநம்பிக்கை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி). நூல் : முஸ்லிம்
188
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஓர் இறைநம்பிக்கையாளருக்கு
ஏற்படும் வலி, துன்பம், நோய், கவலை, அவர் உணரும் சிறு மனவேதனை உள்பட
எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களில் சில மன்னிக்கப்படாமல்
இருப்பதில்லை. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்லிம் 5030
“ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் , அது அல்லாத வேறு எந்தத்
துன்பமாயினும் ( அதற்கு ஈடாக) , மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப்
போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை ” என்று
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அப்துல்லாஹ் பின்
மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் 5023
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் (பாவம்
செய்த) அனைவரும் (இறைவனால்) மன்னிக்கப்படுவர் ; ( தம் பாவங்களைத்) தாமே
பகிரங்கப்படுத்துகின்றவர்களைத் தவிர. ஒரு மனிதன் இரவில் ஒரு (பாவச்)
செயல் புரிந்து விட்டுப் பிறகு காலையானதும் அல்லாஹ் அவனது பாவத்தை
(பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிட்டிருக்க , இன்னாரே! நேற்றிரவு நான்
(பாவங்களில்) இன்னின்னதைச் செய்தேன் என்று அவனே கூறுவது
பகிரங்கப்படுத்துவதில் அடங்கும். (அவன் செய்த பாவத்தை) இரவில்
(பிறருக்குத் தெரியாமல்) இறைவன் மறைத்துவிட்டான். (ஆனால் ,) இறைவன்
மறைத்ததைக் காலையில் அந்த மனிதன் தானே வெளிச்சமாக்கி விடுகிறான். இதை
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6069.
மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக
நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக
குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர்
தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும்
நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை
செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக
நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக்
கொண்டேயிருப்பார் ” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5778
அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும்
கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க
மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:87
நன்றி சகோதரர் மீரான்
No comments:
Post a Comment